ஐரோப்பாவில் 11.93 லட்சம் பேருக்கு கொரோனா; பலி 1.14 லட்சம்

லண்டன்: ஐரோப்பாவில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.14 லட்சம் ஆக உயர்ந்தது. 11.93 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பாவில் கோர தாண்டவம் ஆடி வரும் கொரோனாவால், ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் அதிக உயிர்பலி மற்றும் பொருளாதார பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் ஐரோப்பாவில் மட்டும் நேற்று ஒரே நாளில் 28,925 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது; 3,057 பேர் பலியாயினர். இதனையடுத்து ஐரோப்பாவில் மொத்த பாதிப்பு 11,93,276 ஆக உயர்ந்தது; மொத்த பலி 1,14,259 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 3,76,038 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.


அதிகபட்சமாக ஸ்பெயினில், 2,13,024 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 1,89,973 பேர், பிரான்சில் 1,58,183 பேர், ஜெர்மனியில் 1,53,129 பேர், பிரிட்டனில் 1,38,078 பேர், ரஷ்யாவில் 62,773 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக ஐரோப்பியாவில் கொரோனா பாதிப்பும், உயிர்பலியும் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.